27 இல் இறுதி முடிவு – சிறிகொத்தவில் முகாமிடுகிறது யானைப்படை!
ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 27 ஆம் திகதி சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் முக்கியத்துவமிக்க கூட்டமென்பதால் கட்டாயம் இதில் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் தற்போது கூட்டணியாக இயங்கும் ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு மத்தியசெயற்குழு கடந்த வெள்ளியன்று அனுமதி வழங்கியது.
இதன்படிபுதிய அரசியல் கூட்டணியை, ‘தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது குறித்து இதன்போது இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.