தீர்வுக்கான தமிழரின் போராட்டம் தடைகளைத் தகர்த்துத் தொடரும்! – மாவை எம்.பி. அறிவிப்பு
“எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உறுதியளித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
சுவிஸ் நிறுவனமொன்றின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“எமது தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சிலர் எமது செயற்பாட்டைப் பார்த்து ஒரு கட்சி சார்ந்து செயற்படுவதாகக் கூச்சல் இடுகின்றார்கள். ஆனால், நாங்கள் ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம்.
அதேபோன்று, நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்போம். சம நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பகுதிகளைச் சீரமைத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டடோர் விவகாரம் தொடர்பாகவும் மீண்டும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
இத்தகைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக சர்வதேச சமூகமும் எங்களுடன் நிற்கின்றது” – என்றார்.