எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தவை ஏற்காதீர்கள்! – கூட்டமைப்பு சபாநாயகருக்கு மனு

மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என வலியுறுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மனுவொன்று கையளித்துள்ளது.

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீரவை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாகவும் அங்கீகரிப்பதாக சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார்.

இந்நிலையில் இதனை எதிர்க்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று இந்த மனு கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் விளங்குகின்ற நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை எதிர்க்கட்சியாகவும் கருத முடியாது என அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியாக மாத்திரமின்றி அமைச்சரவை அமைச்சராகவும், அவருக்கு கீழ் ஐந்து அமைச்சுப் பதவிகளும் காணப்படுகின்ற நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *