கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி! இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு!! – மீட்புப் பணிகளில் இராணுவத்தினர்
கிளிநொச்சியில் நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் நிரம்பி பாய்கின்றமையினால் வீதிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சில கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமையால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.