மைத்திரி – மஹிந்தவின் அரசியல் சூழ்ச்சிக்கு டில்லி – வொஷிங்டன் ஓரணியில் நின்று பதிலடி!
இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரான்ஸ் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றின் நெருக்கடிகள் தொடர்பாக, ஏஎன்ஐ செய்திச் சேவையினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நிகர பாதுகாப்பு வழங்குனராக இந்தியாவின் தோற்றத்தை ஆதரித்து வருகின்றது.
அமெரிக்கா. இந்தியாவுடனான ஒருங்கிணைப்பு விரிவானது. அது வளர்ந்து வருகின்றது.
சிறப்பாக, இலங்கை மற்றும் மாலைதீவு விவகாரங்களில், நாங்கள் இந்திய அரசுடன் மிகநெருக்கமாக ஒருங்கிணைந்திருக்கின்றோம்.
வொஷிங்டனிலும், புதுடில்லியிலும் உள்ள இந்திய அதிகாரிகளுடன் நான் தனிப்பட்ட முறையில் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கின்றேன்.
எனவே நாங்கள், இந்த விவகாரங்களை எப்படி கூட்டாக அணுகுவது என்பதை உறுதி செய்வதில் மிகவும் கவனமாக, இருந்தோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.