மு.காவுடன் இணைந்து தேசிய அரசு- சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோருகிறது ஐ.தே.க.!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கமுடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம், சட்டஆலோசனை கோரப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவையில் 30 அமைச்சர்களையே நியமிக்க முடியும் என்பதால், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கமுடியும். நாடாளுமன்றத்திலுள்ள பிரதான இருகட்சிகளும் இணையவேண்டும். அதற்கான சாத்தியம் இல்லை.எனவேதான் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு கட்சியான முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேசிய அரசமைக்க முடியுமா என ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி ஆகிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் , அரசியல் இணையப்போவதில்லை என்று அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *