மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபைக்கு இன்று அறிவிப்பார் கருஜயசூரிய

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கே வழங்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றம் சென்றமகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியானதா என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட அனைவரும், தொடர்ந்தும் தமது கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

அவர் தாமரை மொட்டில் அங்கத்துவத்தை பெறவில்லை என்ற உத்தரவாதமும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்ற சம்பிரதாயம் – நிலையியற்கட்டளையின் பிரகாரம் மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *