புதிய சர்ச்சை வெடித்துள்ளதால் தேடுவாரின்றிக் காணப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம்!
மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுமுன்தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அவரது நியமனத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
எனினும், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களுமே, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை.
சர்ச்சை வெடித்ததை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை. அதேவேளை, இரா.சம்பந்தனும், நேற்றைய அமர்வின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமரவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்காக கடும் வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம் வெறுமையாக – தேடுவாரின்றிக் காணப்பட்டது.