மைத்திரிகீழுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சு விரைவில் ஐ.தே.க. வசம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாகவே சட்டம், ஒழுங்கு அமைச்சை தன்வசம் வைத்துள்ளார் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
” பிரபுக்கள் கொலைசூழ்ச்சி தொடர்பிலான விசாரணைகள் முடிவடையும் வரையிலேயே மேற்படி அமைச்சு ஜனாதிபதி வசம இருக்கும். அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியிடம் ஒப்படைக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது என்றும், இதன்பின்புலத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தொடர்புபட்டுள்ளார் என்றும் நாமல் குமார என்பவர் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.