மலையக இளைஞர்களின் போராட்டத்துக்கு வலுக்கிறது ஆதரவு – நேசக்கரம் நீட்டி வட்டவளையில் போராட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், வட்டவளை – வுன்வேனன் தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கினர்.
தோட்ட ஆலய முன்றலில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்பாட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர். அத்துடன், ஆயிரம் ரூபா வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
” ஆயிரம் ரூபா சம்பளத்துக்காக மலையகமெங்கிலும் கடந்த காலங்களில் போராட்டங்கள் வெடித்தன. எனினும், பலன்கிட்டவில்லை. இந்நிலையில், எமது பிரச்சினையை – கோரிக்கையை தேசிய மயப்படுத்தி எமது பிள்ளைகளால் கொழும்பில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்த இளைஞர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளை, மலையக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துவருகின்றது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா