மலையக இளைஞர்களின் போராட்டம் குறித்து சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மலையக இளைஞர்கள் இருவர் – இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தோட்டத்தொழிலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியான வேலுகுமார் இன்று பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றிய வேலுகுமார் எம்.பி.,
” பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடிவருகின்றனர். இதனால், மலையகமெங்கிலும் எழுச்சித்தீ கொழுந்துவிட்டெரிகின்றது. குறிப்பாக இளைஞர்களும் போராட்டத்துக்கு வலுசேர்த்துவருகின்றனர். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் இரு இளைஞர்கள் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஸ்தீரமானதொரு அரசாங்கம் அமைந்த பின்னர், சம்பளப் பிரச்சினையை தேசிய முக்கியத்துவமிக்கப் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தி நாமும் அரசியல் ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிப்போம்” என்று கூறினார்.