அரசியல் கைதிகள் விடுவிப்பு: மைத்திரியின் நிபந்தனைக்கு எதிராக மாவை போர்க்கொடி!
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34 (1) என்ற தீர்மானத்துக்குக் கடந்த காலத்தில் இலங்கை அரசு இணை ஆதரவு வழங்கியிருந்தது. அதாவது நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக, இராணுவத்தினருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது, அவர் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்” – என்றார்.