எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கே! – சபாநாயகரிடம் கோருவோம் என்கிறார் பீரிஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாகச் செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கே வழங்கப்படவேண்டுமெனச் சபாநாயகரை வலியுறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு நாம் சபாநாயகரை வலியுறுத்தவுள்ளோம். தற்போதைய நிலையில் மஹிந்தவுக்கு அந்தப் பதவியை வழங்காமலிருக்க சந்தர்ப்பம் இல்லை.
அமைச்சரவையை நியமிப்பது இலகுவான காரியம் அல்ல. அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும்.
எனவே, தேசிய அரசு ஒன்று அமைக்கப்பட்டால் மாத்திரம்தான் இந்த அமைச்சரவை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படாது.
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமானால் ஜனாதிபதியால் அதனை நிராகரிப்பதற்கு வாய்ப்புள்ளது” – என்றார்.