’19’ ஆல் நெருக்கடி – அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருக்க மனோ, ரிசாட், மலிக் முடிவு!
புதிய அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன், மலிக் சமரவிக்ரம ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
டுவிட்டர் பதிவின் ஊடாக இத்தகவலை மனோ கணேசன் உறுதிப்படுத்தினார்.
தனியாட்சி அமையும் பட்சத்தின் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஆகவரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சி தாவிய உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளைக் கேட்பதால், புதிய அமைச்சர்கள் நியமனத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நாடாளுமன்றக்கட்டத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது, அமைச்சர் தொகையை 30இற்குள் வைத்துக்கொள்ள தான் தடுமாறுவதாகவும், எவராவது சுயமாக முன்வந்து அமைச்சு பதவிகளை பெறாமல் இருக்க முடியுமா என பிரதமர் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த மனோகணேசன், அவசியமானால், நான் அமைச்சு பதவி ஏற்காதிருக்கிறேன் என்று கூறியுள்ளார். ரிசாட் பதியூதினும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.