அஞ்சலோ மெத்யூஸ் – குசல் மென்டிஸ் ஜோடி சிறப்பாட்டம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விதிமுறைகளை மீறி செயற்பட்டதே இதற்குக் காரணமாகும்.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
போட்டியில் 96 ஓவரின் போது டொம் லதம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லஹிரு குமார களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், லஹிரு குமார வசைபாடியதாகவும் இதனூடாக அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போட்டிக் கட்டணத்தில் 15 வீத அபராதம் விதிக்க போட்டி மத்தியஸ்தரான ரிச்சி ரிச்சட்ஸன் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் விதத்தில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 259 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக இலங்கை அணிக்கு இன்றைய நான்காம் நாளில் 276 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
03 விக்கெட் இழப்பிற்கு 20 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
குசல் மென்டிஸ் 5 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மெத்யூஸ் 02 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
குசல் மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் இன்றைய தினத்தில் இரட்டைச்சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து அந்த சாதனையை நிலைநாட்டினர்.
முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் டெஸ்ட் அரங்கில் 9 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
அஞ்சலோ மெத்யூஸ் 117 ஒட்டங்களையும் குசல் மென்டிஸ் 116 ஒட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களைப் பெற்றது.