காலிமுகத்திடலில் இன்று அரசியல் சதியின் வெற்றிக்கொண்டாட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டமாக இந்த மாநாடு அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்த வெற்றியை எம்மால் பெற்றுக்கொண்டிருக்க முடியாது. அரசமைப்புக்கு மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவே ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து, ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.
இதற்கெதிராக நாம் தொடர்ந்தும் பல்வேறு முறைகளில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். இறுதியில், இந்தச் சூழ்ச்சியைத் தோற்கடித்து நாம் வெற்றியும் பெற்றுக்கொண்டுள்ளோம்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெறும் இந்த மாநாடு, இந்த அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்த வெற்றி மாநாடாக நடைபெறவுள்ளது.
இதில், ஆதரவாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.