கருப்பாடுகளுக்கு அமைச்சரவையில் இடமில்லை! – ஐ.தே.க. திட்டவட்டம்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையும் அமைச்சரவைக்கு உள்வாங்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனினும், கருப்பாடுகளுக்கு, டபள்கேம் ஆடுபவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்கும். அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இதற்கமைய அமைச்சரவையை நியமிக்கவே நாம் முயற்சிப்போம். எனினும், கூட்டாட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. சுதந்திரக் கட்சியினர் எம்முடன் இணையப் போகின்றனரா என தற்போது எம்மிடம் சிலர் வினவுகின்றனர். அவ்வாறு இணைத்துக் கொள்வதாயின் மிகவும் நுணுக்கமாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, சிறந்தவர்களை மாத்திரமே இணைத்துக் கொள்வோம். டபள்கேம் ஆடுபவர்களுக்கு இடமில்லை.” என்றும் கூறினார்.