மக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்! – மஹிந்தவின் சகா வாசுதேவ சபதம்
“மக்கள் ஆணையின் ஊடாக அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் முன்னோக்கி நகர்வோம்” என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மோசமான ஆட்சியாளர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத வகையில் ஒரு ஐக்கியப்பாட்டை எம்மால் ஏற்படுத்த முடிந்தமையை எண்ணி நாம் திருப்தி அடைகின்றோம்.
எமது பலத்தை மக்கள் சக்தியுடன் ஒன்றிணைத்து மக்களுக்கும், நாட்டுக்கும் எதிரான இந்த அரசின் விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
அதுமாத்திரமின்றி, எதிர்காலத்தில் மக்கள் ஆணையுடன் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுவோம்” – என்றார்.