மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டி மீண்டும் அரியணை ஏறிய ரணில்!

சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்க – இலங்கைவாழ் மக்கள் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருக்க, ‘2018 ஒக்டோபர் 26’ அரசியல் சதித் திட்டத்துக்கும் மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார ஆட்டத்துக்கும் முடிவு கட்டி மீண்டும் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பிரதமராகப் பதவியேற்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் 20 முக்கிய பிரமுகர்களுடனும் தனது பாரியாருடனும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றிருந்தார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் முற்பகல் 11.16 மணியளவில் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பெருமளவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் திரண்டு நின்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.

இலங்கையில் 5ஆவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்குத் திரும்பிச் சென்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *