பிரதமர் பதவி விலகலுக்கான கடிதத்தில் கண்ணீர்மல்க கையெழுத்திட்ட மஹிந்த!

பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. அறிவித்துள்ளார்.

மஹிந்தவின் விஜேராம மாவத்தை இல்லத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில், அவரது ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், பதவி விலகல் கடிதத்தில் கண்ணீர்மல்க கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, மஹிந்தவுக்கு ஆசி வழங்கும் பௌத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றன.

புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிப்பதற்கு, இடமளிப்பதற்காகவே, தாம் பதவியில் இருந்து விலகியுள்ளதாக, மஹிந்த கூறினார் என, அவரது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் நாள் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 50ஆவது நாளில் பதவியை விட்டு விலகியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்காத – அலரி மாளிகையில் வசிக்காத – மேன்முறையீட்டு நீதிமன்றினால், பிரதமராக செயற்பட முடியாமல் தடுக்கப்பட்ட பிரதமராக மஹிந்த இந்த 50 நாட்களையும் கழித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *