புதிய அமைச்சர்களின் பட்டியல் இன்று மைத்திரியிடம் கையளிப்பு!

புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பார் என்று ஐ.தே.க. வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளைமறுதினம் திங்கட்கிழமை இடம்பெறலாம் என்றும் எதிர்பாார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐ.தே.க. தலைவர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

இன்று அமைச்சர்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கையளிப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய அமைச்சர்களாக 30 பேரையும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக 45 பேரையும் நியமிக்க முடியும்.

இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் இடம்பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *