இறுதிப் போரில் சரணடைந்த 500 பேருக்கும் என்ன நடந்தது? – சர்வதேச அமைப்புகள் கேள்வி

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த 2009 மே 18 – 19ஆம் திகதிகளில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு இலங்கை இராணுவம் பதிலளிக்கவேண்டும் என இரு சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

படையினரிடம் சரணடைந்தவர்களின் விவரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் இரு சர்வதேச அமைப்புகளே இந்த அறிக்கையை விடுத்துள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மனித உரிமை தர ஆய்வுக் குழு ஆகிய அமைப்புகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதிகளவானவர்கள் காணாமற்போன நாடுகளில் இலங்கையும் ஒன்று எனத் தெரிவித்துள்ள இந்தச் சர்வதேச அமைப்புகள், 500 பேர் ஒரே இடத்தில் ஒரே தருணத்தில் காணாமல்போனமை மிக முக்கியமான விடயம். ஒரே தருணத்தில் பெருமளவானவர்கள் காணமற்போன சந்தர்ப்பம் இது எனவும் தெரிவித்துள்ளன.

2009இல் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களின் பாரிய எண்ணிக்கை காரணமாக இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் சூகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், இதற்குப் பதிலாக ஒரு வருடம் கடந்துவிட்டது, இன்னமும் எவரும் 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாகயிருந்தவரிடம் விசாரணை நடத்தவில்லை . விடுதலைப்புலிகளின் பகுதியிலிருந்து வந்தவர்கள் படையினரிடம் சரணடையும்போது அப்பகுதியில் 58 படைப்பிரிவின் தளபதி காணப்பட்டார் என ஐ.நாவின் தகவல்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்கள் மூலம் அறிய முடிந்துள்ளது என யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு ஜெனரல் தரத்துக்குப் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதும் இதன் காரணமாக அவர் இராணுவத்தின் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமையும் காணாமற்போனவர்களின் குடும்பத்தவர்களுக்குச் செய்யும் அவமரியாதை எனவும் அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்தவர்களுக்குப் பதில் வழங்கப்படவேண்டும், அவர்களுக்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது எனவும் அவர் கூறினார்.

யுத்தத்தின்போது காணாமல்போனவர்களின் பெயர் விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஐ.டி.ஜே.பி. கடந்த பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது. தற்போது அதனிடம் 300 பேரின் படங்களும் பெயர்களும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

2011 இல் நாங்கள் சரணடைந்தவேளை காணாமல்போன 20 பேரின் விவரங்களை பெற்றோம். 2014 இல் அது 103 ஆக அதிகரித்தது, இவ்வருட ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரித்தது. தற்போது எச்.ஆர்.டீ.ஏ.ஜி. அமைப்பு சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 500ற்கும் அதிகம் என கருதுகின்றது என யஸ்மின் சூகா மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *