இன்று வெள்ளிக்கிழமை! நள்ளிரவுக்கு முன் மைத்திரி அதிரடி அரசியல் தீர்மானம்!!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மஹிந்த அணியினரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச   –  அவரது அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கான மனுக்களை ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்திருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ச  தரப்பு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று அறியமுடிகின்றது.

பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளை மையப்படுத்தியே கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய சில அரசியல் தீர்மானங்களை எடுத்தார். மஹிந்த பிரதமராக நியமனம், நாடாளுமன்றம் கலைப்பு என முக்கிய அரசியல் நிகழ்வுகள் வெள்ளியன்றே எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *