இன்றைய தீர்ப்பும் பாதகமெனில் பதவி விலக மஹிந்த அணி முடிவு!
பிரதமராக கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நியமிக்கப்பட்ட, மஹிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தெரியவருகின்றது.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில், மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில், கருத்து வெளியிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள், அரசில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்றே வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று நடத்தப்படும் விசாரணைகளில் அளிக்கப்படும் உத்தரவுக்குப் பின்னரே இறுதி முடிவை எடுப்பது என்று இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று மாலை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயார் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.