நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு சமாதிகட்ட ’20’ ஐ கையிலெடுகிறது ஜே.வி.பி.!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி –  அவர்களின் பேராதரவைப் பெறுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டவரைவை – தனிநபர் பிரேரணையாக ஜே.வி.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. குறித்த சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவை வழங்கியிருந்தாலும், சுதந்திரக்கட்சி, கூட்டுஎதிரணி ஆகியன கடுமையாக எதிர்த்தன.

’20’  தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல்கள் உருவாக்கப்பட்டுவந்த சூழ்நிலையில், நாட்டில் அரசியல் குழப்பம் தலைதூக்கியதால் அவ்விவகாரம் அப்படியே கைவிடப்பட்டது. எனினும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டியதன் கட்டாயத்தை நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் உணர்த்தியுள்ளது.

ஆகவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டகையோடு –  20 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து மக்கள் மத்தியில் பிரசாரம் முன்னெடுத்தால் அதற்கு பேராதரவு கிடைக்கும் என்றும், இதற்காக விசேட கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஜே.வி.பி. நேற்று தீர்மானித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அது தொடர்பில் ஜே.வி.பி. தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *