பச்சைக்கொடி காட்டினார் மைத்திரி ! நாளை பதவியேற்கிறார் ரணில்?
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமராக பதவியேற்கலாம் என தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் – அரசமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது.
இதையடுத்து இரவோடிரவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே, ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது என்றும், இதற்கு மஹிந்த தரப்பிலிருந்தும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைபலத்தை கொண்டுள்ள கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையைவென்ற நபரை பிரதமராக நியமிக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனவே, இனியும் இழுத்தடிப்புசெய்தால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே தனது முடிவைமாற்றி – ரணிலுக்கு வாய்ப்பை வழங்க ஜனாதிபதி முன்வந்தார் என கூறப்படுகின்றது.