தாக்குதலில் குடும்பஸ்தர் பலி! மக்கள் கல் வீசி ஆர்ப்பாட்டம்!! நான்கு பொலிஸார் படுகாயம்!!! – அம்பாந்தோட்டையில் பதற்றம்
அம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் இடம்பெற்ற கைகலப்பில் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கட்டுவன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 50 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களினால் பொலிஸார் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பிரதேசத்தில் டயர் எரித்து பதற்றத்தை ஏற்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இறுதியில் கண்ணீர்ப் புகை மேற்கொண்டு பொதுமக்களை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.