மைத்திரிக்கு நீதிமன்றம் தக்க பதிலடி! – பொன்சேகா மகிழ்ச்சி

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியாவது நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்ற இன்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அரசமைப்புக்கு முரணான முடிவுகளை நிறைவேற்ற முயற்சித்தார். ஆனால், உயர்நீதிமன்றம் அவற்றுக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அதன் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. அத்தோடு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில், அரசமைப்பை மீறி செயற்படுத்திய விடயங்களால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளை ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *