நெருக்கடிக்குக் கூட்டமைப்பு மிகக்காத்திரமான பங்களிப்பு! – மனோ கணேசன் பாராட்டு
“நாட்டில் நிலவும் தேசிய நெருக்கடிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரியும், அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெறுமனே வடக்கு – கிழக்கு குறித்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தென்னிலங்கையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இன்று (நேற்று) இதனைப் பொய்யாக்கும் வகையில் நாட்டினது நலனுக்காகக் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது.
தேசிய நெருக்கடிக்குக் கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியமைக்கு மஹிந்த உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் பெருமைப்படவேண்டும்.
இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்களுக்கு எமது அரசு மேலும் பல திட்டங்களை முன்வைக்க வேண்டும் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” – என்றார்.