கொந்தளிக்கின்றது கொழும்பு அரசியல்! இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியீடு!! – வழிமீது விழிவைத்து அனைவரும் காத்திருப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று மாலை 04 மணிக்கு அறிவிக்கவுள்ளது.

மேற்படி மனுக்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணை செய்தது. நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பு அறிவிக்கப்படும் திகதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் பலரும், கடந்த சில நாட்களாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.அவர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை தொகுக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளை வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்காலம் ஆரம்பமாகவுள்ளது. இதனால், அதற்கு முன்னர், இன்று மாலை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

இந்தத் தீர்ப்பு தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது வெளியாகும்வரை அனைத்துத் தரப்பும் காத்திருக்கின்றன.

தீர்ப்பு இன்று மாலை 04 மணிக்கு அறிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் இன்று காலை அறிவித்ததையடுத்து நீதிமன்றத்தின் முன்னால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *