மைத்திரியின் செயல் படுகேவலம்! – சாடுகின்றார் தலதா
“மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுக்களை வைத்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிரட்டி வருகின்றார். இது படுகேவலமானது.”
– இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு திறம்பட முன்நகர்த்திக் சென்றது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளுக்கு எதிராக நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க ஜனாதிபதி மைத்திரியே தடையாக இருந்தார் என்பது உண்மை.
நல்லாட்சி அரசுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டவர்களின் கருத்துக்களைக் கேட்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மைத்திரி நியமித்தார்.
பிணைமுறி மோசடி விவகாரத்துடன் ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டிருந்தால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் அவருக்கு எதிராக மைத்திரி நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
தனது அரசியல் சதித் திட்டத்தை பொய்களைச் சொல்லி நியாயப்படுத்துவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் விவாகரத்தை மைத்திரி இன்று கையிலெடுக்கின்றார்.
ஊழல், மோசடிக்காரர்களுடன் மீண்டும் கைகோர்த்த மைத்திரி, இப்படிப் பொய்களைச் சொல்லுவது அவருக்குத்தான் வெட்கக்கேடு” – என்றார்.