நம்பிக்கைத் தீர்மானத்தை ஏற்கமுடியாது! – மஹிந்த அணி அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்ககோரி அவர்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சபையில் இன்று புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணைக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.
குறித்த நம்பிக்கைத் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
” நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வழக்கு விசாரணையும் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு புறம்பாக சபை அமர்வு இடம்பெற்றுவருகின்றது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்பாக சபாநாயகர் செயற்படுகின்றார்.
நாடாளுமன்றம் இந்த நாட்களில் கூட்டப்படுவது சட்டவிரோதமாகும். எனவே அங்கு நிறைவேற்றப்படும் எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இதேவேளை அரசாங்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதானது பாழடைந்த வீட்டில் பாத்திரங்களை உடைப்பது போன்ற செயலென நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி இதன்போது தெரிவித்துள்ளார்.