இரண்டு ஜனாதிபதிகளால் விரட்டப்பட்ட பிரதமர் ! ரணிலை சீண்டுகிறது மஹிந்த அணி!!
ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது என்று மஹிந்த, மைத்திரி கூட்டணி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டுஎதிரணி எம்.பியான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக மேலும் கூறியதாவது,
” ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதிக்குள் சமஷ்டித் தீர்வு, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு இல்லாமல்போகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெற்கு இல்லாமல்போகும். மேற்படி உடன்படிக்கையின் இறுதி பிரதிபலன் இவ்வாறுதான் அமையப்போகின்றது. அதற்கேற்றவாறு எமது அரசியல் வியூகம் அமையும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தேர்தலுக்கு தயாராவோம். பிழையென தீர்ப்பளித்தால் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க முற்படமாட்டோம். அடுத்த தேர்தலை இலக்கு வைத்து செயற்படுவோம்.” என்றார்.
அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட கெஹலிய ரம்புக்வெல்ல,
” இரண்டு ஜனாதிபதிகளால் விரட்டப்பட்ட பிரதருக்கே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.