பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் ! மஹிந்த அணி புறக்கணிப்பு
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை (12) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்ககோரியும், அவர்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் நம்பிக்கைப் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்படும். அதுமீதான விவாதம் முடிவடைந்ததும் – இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் .ஜே.வி.பி. எதிர்த்து வாக்களிக்கும் என்று அக்கட்சியின் எம்.பியொருவர் தெரிவித்தார்.மஹிந்த – மைத்திரி கூட்டணி உறுப்பினர்கள் நாளைய தினமும் சபை அமர்வை புறக்கணிப்பார்கள் என தெரியவருகின்றது.
நாடாளுமன்றத்துக்குள்ளும் – அதன் வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். பார்வையாளர் மற்றும் விசேட பிரதிநிதிகளுக்கான கலரி மூடப்பட்டிருக்கும்.
அதேவேளை, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று இரவு வெளியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.