O/L பரீட்சை – ‘கொப்பி’அடித்த 50 மாணவர்களுக்கு ஆப்பு! தினமும் 4 முறைப்பாடுகள் பதிவு!!
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில், நாளாந்தம் மூன்று அல்லது நான்கு முறைப்பாடுகள் கிடைப்பதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான முறைப்பாடுகள் குறித்து பரிசீலிப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார்.இப்பரீட்சை தொடர்பில், இதுவரை 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அடையாளங் காணப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில், மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சையில் தோற்றிய மாணவர் மற்றும் அவருக்கு உதவிய ஆசிரியை மீதும், விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த விடயம் குறித்து, கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஒழுக்காற்றுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாணவருக்கு உதவிய ஆசிரியையை வரவழைத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )