‘யானை’, ‘தாமரை மொட்டு’, ‘கை’ சங்கமம் ! பசறையில் நிறைவேறியது பட்ஜட்!!
2019 ஆம் நிதியாண்டுக்கான பசறை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட நிதி அறிக்கை 21 (இருபத்தொன்று) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சபையில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஒன்பது பேரும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஆறுபேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் அறுவரும் , மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒருவரும், புரட்சித் தமிழர் பேரவை சார்பாக ஒருவருமாக 23 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ரன்ஜித் சுனில் சில்வா வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்தார். ஜே.வி.பி. உறுப்பினர் சரண நந்தன பண்டார ‘பட்ஜட்’டை எதிர்த்து வாக்களித்தார். இவ்விருவரைத் தவிர ஏனைய அனைவரும் வாக்கெடுப்பில், வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சபையின் தலைவர் ஆர்.எம்.ஞானதிலக்க, சபையின் அடுத்தாண்டிற்கான (2019) வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கையை 10-12-2018ல் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று, வாக்கெடுப்பு சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.