சு.க. உறுப்பினர்கள் ஐ.தே.கவில் அரசியல் தஞ்சம்! – மாகாண அமைச்சரும் தாவல்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இருஅணிகளாகப் பிளவுபட்டுள்ளதால், அக்கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் அரசியல் தஞ்சமடைந்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சரான திலின பண்டார தென்னக்கோனும் யானைக் கூட்டணியுடன் சங்கமித்துள்ளார்.
” தாய்க் கட்சியான சுதந்திரக்கட்சியை ஒருசிலர் தமது சுயநல அரசியலுக்காக நேற்று முளைத்த கட்சியிடம் அடகுவைத்துள்ளனர். இதை எம்மால் ஏற்கமுடியாது. அதனால்தான் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய சக்தியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தேன்” என்று திலின பண்டார கூறினார்.
சு.கவின் உபதலைவர்களான பௌசி, பியசேன கமகே ஆகியோரும், கட்சி தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டு, ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். மேல்மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் இவ்வாறு ஐ.தே.க. பக்கம் தாவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ்மட்ட அரசியல் இந்திரமும் தற்போது பலமடைய ஆரம்பித்துள்ளது என்றும், இனிவரும் நாட்களிலும் கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளன என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.