ரணிலின் ‘தலை’யைக் காக்க சம்பந்தன், ஹக்கீம், மனோ, ரிசாட் களத்தில்!
ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறுகோரி ஐக்கிய தேசியக்கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள ‘நம்பிக்கைபிரேரணை’க்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அறிவித்துள்ளன.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப்பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கான ஆதரவளிக்கப்படும் என கடிதம்மூலம் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனவே, எனவே, அம்முன்னணியால் முன்மொழியப்படும் பிரதமருக்கும் கூட்டமைப்பு பச்சைக்கொடி காட்டும் என்றே கூறப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதிமுடிவு அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர், கூட்டமைப்பின் குழுக் கூட்டம் நடைபெறும் .
தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிக்கட்சிகளாக அங்கம் வகித்தாலும் – அரசியல் ரீதியான முடிவுகளை சுயாதீனமாக எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே நிபந்தனையின்றி ரணிலை ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆறு எம்.பிக்களைகொண்டுள்ள ஜே.வ.பி., ரணிலுக்கு ஆதரவான பிரேரணையை எதிர்க்கவுள்ளது.