நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்ன? மைத்திரி – மஹிந்த இரண்டரை மணிநேரம் பேச்சு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து தோழமைக் கட்சிகளையும் ஒன்றிணைந்து ‘மெகா’ அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இன்று (10) பேச்சு நடத்தியுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது.
தினேஸ் குணவர்தன, விமல்வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட மஹிந்தவின் சகாக்களும், சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு, அதை மையப்படுத்திய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது இருமணிநேரத்துக்கும் மேலாக தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள போராட்டம் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல் கூட்டணி தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.