பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதானே நாம் சொல்ல வேண்டும்! – மைத்திரியை மீண்டும் போட்டுத் தாக்கினார் பொன்சேகா

“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து, அவருக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். மக்கள் இன்று கடும் கொதிப்பில் இருக்கின்றார்கள். அவர்களே, மைத்திரிபாலவை ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது.”
– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
‘பொது வெளியிலும், நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றத்திலும் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனநோயாளி என்றும், அவர் ஒரு பைத்தியக்காரன் என்றும் கூறியுள்ளீர்களே! இது சரியா?’ என்று வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கை செய்தியாளர் சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வாதிகாரி. இதை அவர் இன்று வெளிப்படையாகவே நிரூபித்துக் காட்டுகின்றார். அவரின் அராஜகச் செயல்கள் விரைவில் அடங்கும். அவர் அண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் கூறியது போன்று தனது ஜனாதிபதி பதவியைத் துறந்துவிட்டு  சொந்த ஊரான பொலனறுவைக்குச் சென்று விவசாயம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும். அந்த நிலைமையே அவரே இன்று உருவாக்கியுள்ளார். அவருக்கு மன்னிப்பு வழங்க நாமும் நாட்டு மக்களும் தயாராக இல்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *