ரணிலுடன் இரகசிய டீலா? ஜே.வி.பி.மீது மஹிந்த பாய்ச்சல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்குமிடையில் எவ்வித இரகசிய கொடுக்கல்- வாங்களும் ( டீல்) இல்லை என்று முன்னாள் ஜனாதிபதியான குருணாகலை மாவட்ட எம்.பி. மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் அனுமதியுடனேயே ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் வசித்துவருகிறார் என்று ஜே.வி.பியால் நேற்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலடிகொடுக்கும் வகையிலேயே மஹிந்த மேற்படி கருத்தை வெளியிட்டார்.

கண்டி தலதாமாளிகையில் இன்று நடைபெற்ற ஆன்மீக வழிபாட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த மேலும் கூறியதாவது,

”   நாட்டு மக்களின் நன்மை கருதி பல்வேறு புதிய வேலைத் திட்டங்களை முன் எடுக்க திட்டமிட்டிருந்தேன். அவை அனைத்தும் தற்போது பொது மக்களுக்கு கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஐக்கிய தேசியக்கட்சியே பொறுப்புகூறவேண்டும்.

பொதுத்தேர்தலுக்கு செல்வதே அரசியல் நெருக்கடிக்கான சிறந்த தீர்வாக அமையும். ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. சிறுகட்சிகளின் ஒத்துழைப்பின்றி பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டட்டும் பார்ப்போம். ரணிலை பிரதமராக்க ஜே.வி.பி. ஒருபோதும் ஆதரவளிக்காது.

மூன்று வருடங்களாக நாட்டு மக்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி கொடுத்த இன்னல்களும், நெருக்கடிகளும் போதும் போதுமென்றாகிவிட்டது. இதனால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பொதுத்தேர்தலை கோருகின்றனர். அதை நடத்துவதே சிறந்த தீர்வாக  அமையும்.

அதேவேளை, ரணிலுக்கும், எனக்குமிடையே எவ்வித இரகசிய டீலும் இல்லை. நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசுவது இரகசிய நடவடிக்கையாக அமையாது. எனவே, ஜே.வி.பியின் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார் மஹிந்த.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *