பாரீஸ் போராட்டத்தில் வன்முறை – 575 பேர் கைது

பாரீஸ் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 575 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், இப்போது திசை மாறி உள்ளது. டீசல் மீதான வரி உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அரசின் பிற கொள்கைகளை எதிர்த்தும், வாழ்வாதார பிரச்சினைகளை மையமாக கொண்டும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தலைநகரான பாரீசில் நேற்று போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் வன்முறை மூளும் என்ற எதிர்பார்ப்பில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு சாம்ப்ஸ் எலிசீஸ் அவினியூவில் கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக புறப்பட்டனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை மூண்டது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.

இந்த மோதல் தொடர்பாக 575 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாரீஸ் புறநகரில், பாரீசுக்கு செல்லும் முக்கிய வழித்தடமான போர்ட்டே மெய்லட்டில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மஞ்சள் சட்டை இயக்கத்தினர் போக்குவரத்தை முடக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *