மக்கள் ‘கெட்அவுட்’ சொன்னால் அரசியலுக்கு ‘குட்பாய்கூற ரெடி’ ! மஹிந்த அறிவிப்பு
மக்கள் ஆதரவு இருக்கும் வரை மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும். அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
” நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு சபாநாயகரும், ஐக்கிய தேசியக்கட்சியுமே பொறுப்புக்கூறவேண்டும். மக்கள் நிலைப்பாட்டை அறிவதற்காகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலுக்கு செல்லும் முடிவை ஜனாதிபதி எடுத்தார்.
பொதுத்தேர்தல் ஊடாகவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணமுடியும் என நம்புகின்றேன். அதை நடத்துவதற்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும். மக்கள் ஆணையே மகத்தானது. மக்கள் எம்மை நிராகரித்தால், விடைபெறுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். மாறாக மிரட்டல்கள், அடக்குமுறைகள்மூலம் எம்மை வெளியேற்றிவிடமுடியாது.
அரசியலில் பதவிகள் இருக்கும், இல்லாமல் போகும். பதவிக்காக அரசியல் செய்யவில்லை என்பதை ஐக்கிய தேசியக்கட்சிக் காரர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அதேவேளை, அரசியல் குழப்பநிலைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூறவேண்டும். நாடாளுமன்ற சம்பிரதாயத்தை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார்” என்றும் மஹிந்த குறிப்பிட்டார்.