பிரான்சில் நாளை மிகப்பெரிய போராட்டம் – ஈபிள் கோபுரம் மூடப்பட்டது

பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறும் போராட்டம் காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர்.

ஏற்கனவே சனிக்கிழமை (நாளை) மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர். மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.

எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி நாளை மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் 89 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை நாளை அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரமும் இதே போல ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பிரான்சில் உலகப்புகழ் பெற்ற ஆர் டி ட்ரோம் சேதப்படுத்தப்பட்டது.

அதேபோல நாளை போராட்டம் நடக்கும்போது பாரீசில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈபிள் கோபுரம் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *