நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மஹிந்த போர்க்கொடி!
வழக்குகளுக்குப் பயந்தே அரசை பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், தனக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தன்னை அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்குத் தேவையான வழக்குகளைத் தாக்கல் செய்து, தற்போது அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் ஐ.தே.க. எடுத்துள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
“இன்று ஜனாதிபதி இருக்கின்றார். செயலாளர் இருக்கின்றார். அந்த அரசில் நாம் சேவை செய்கின்றோம். அத்துடன் வழக்கின் தீர்ப்பு குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் எதிர்க்கின்றோம். உலகில் எங்குமே நிகழாத சம்பவம்தான் இங்கு நடந்துள்ளது. அதாவது உலகில் முதல் தடவையாக நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் அரச பணியாளர்கள். அதனால் இந்தத் தீர்ப்புத் தவறு என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கின்றோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.