சு.கவிலிருந்து என்னை ஓரம்கட்ட முயற்சி! – சீறிப் பாய்கின்றார் சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், தன்னை ஓரம்கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் ரோகண லக்ஷ்மன் பியதாஷவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 4ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு, என்னையும், களனி அமைப்பாளர் திலக் வாரகொடவையும் தவிர, ஏனையவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
என்னையும் வேரகொடவையும் இந்த மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என்று அமைப்பாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண கேட்டுக்கொண்டார் என்று அறிகின்றேன்.
கடந்த நவம்பர் 30ஆம் திகதியை அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு விட்டபோதும், இதுவரை எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.
இது கட்சியில் இருந்து என்னை ஓரம் கட்டுவதற்கான முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது” என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.