அலரிமாளிகையை தவறாகப் பயன்படுத்துகிறார் ரணில்! மஹிந்த அணி குற்றச்சாட்டு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையை தவறாகப் பயன்படுத்துகிறார் என கூட்டுஎதிரணி எம்.பியான ஷெயான் சேமசிங்க குற்றஞ்சாட்டினார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் புதன்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிலையிலேயே கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்படி குற்றச்சாட்டை மஹிந்த அணி உறுப்பினர் முன்வைத்துள்ளார்.
பிரதமர் பதிவில் இருந்து ரணில் நீக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகளை அவர் எப்படி அலரிமாளிகையில் வைத்து சந்திக்க முடியும்?உட்கட்சி பூசல் காரணமாக பிரதமர் பதவிக்கு ரணிலை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைப்பதில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்துவிட்டது.
ஆனால், ஒரு போதும் ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக கூறிவிட்டார். எனவே, பொதுத்தேர்தலுக்கு செல்வதே சிறந்த வழி” என்றும் அவர் கூறினார்.