ரவி – தொண்டா மூடியஅறைக்குள் பேச்சு! இதொகாவுக்கு ஐ.தே.க. வலை?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தம்பக்கம் வளைத்துப்போடும் முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது என்றும், அக்கட்சியின் உபதலைவரான ரவிகருணாநாயக்க, ஆறுமுகன்தொண்டமானை தேடிச்சென்று பேச்சு நடத்தியுள்ளார் என்றும் நம்பகரமான அரசியல் வட்டாரத்திலிருந்து அறியமுடிகின்றது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் இழுபறி நடத்துவருவதால் தொண்டமான் கடும் அதிருப்தியில் இருக்கிறார். மஹிந்த தரப்பும் போதிய அக்கறை காட்டாததால் எம்.பி. பதவியை துறக்கும் முடிவை விரைவில் அறிவிக்க அவர் தயாராகியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் இ.தொ.காவின் தலைமையகத்துக்கே நேரில் சென்று அதன் தலைவரான ஆறுமுகனுடன் ரவி பேச்சு நடத்தியுள்ளமை குறித்து பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
அரசியலுக்கு அப்பால தனிப்பட்ட ரீதியிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது என இதொகாவின் தரப்பில் அறிவிக்கப்பட்டாலும், சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. வடிவேல் சுரேஸின் தலையீட்டுடனேயே சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி அரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை உள்வாங்கக்கூடாது என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாக இருந்துவருகின்றது. அக்கட்சிவசம் ஆறு எம்.பிக்கள் இருப்பதால், இ.தொ.காவின் இரண்டு எம்.பிக்களுக்காக ஆறுபேரை ஐ.தே.க. இழக்குமா என்பதும் கேள்வியே.
அரசியல் களத்தில் மனோ – ரவி உறவு அவ்வளவு சிறந்ததாக இல்லை. மனோவுக்கு எதிரான ஒருவர் சென்று, தொண்டாவுடன் பேச்சு நடத்தியிருப்பதும் பலகோணங்களில் சிந்திக்கவைத்துள்ளது.