மைத்திரியின் ‘குடியுரிமை’யும் பறிபோகும் நிலைமை ஏற்படும்! – ஜே.வி.பி. எச்சரிக்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பு மீறல்களைப் புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வர முடியும். அதைவிட அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும்.”

– இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை அரசமைப்பை மீறியிருக்கின்றார். தொடர்ந்தும் அத்தகைய மீறல்களில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

ரணில் விக்கிரமசிங்கவை அவர் பதவி நீக்கம் செய்தது அரசமைப்புக்கு எதிரானது. மஹிந்த ராஜபக்ஷவை அவர் பிரதமராக நியமித்ததும், அரசமைப்பு மீறல். நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு உத்தரவிட்டதும் அரசமைப்பை மீறிய செயல்.

இந்த அரசமைப்பு மீறல்களால் அவர் குடியுரிமையையும் இழக்கும் நிலை ஏற்படும்.

ஜனாதிபதி குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்” – என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *