எனது உயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு! – மூன்று மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ரிஷாத் தெரிவிப்பு
தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அதற்கு வகை சொல்ல வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி. தெரிவித்தார்.
இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
“ஜனாதிபதி மற்றும் கோட்டபாய ராஜபக்ஷவை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்த நாமல் குமார, பின்னர் அம்பாறை – மட்டக்களப்பில் வைத்து என்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எமது கட்சியின் தவிசாளர், செயலாளர் உட்பட எம் பிக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருந்தனர்.
வடக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்பவனென்ற வகையிலும் கெபினட் அமைச்சரென்ற வகையிலும், கட்சித் தலைவனென்ற வகையிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்” என்றும் ரிஷாத் எம்.பி. மேலும் கூறினார்.